தமிழக முதல்வர், பிரதமரிடம் நேற்று அளித்த மனு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய மனுவாக இருக்காது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்தும் இன்னும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முழு அடைப்புப் போராட்டம், ரயில் மறியல் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்களும் நடைபெற்றன. காவிரி விவகாரம் தொடர்பாகச் சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மற்றொரு பகுதியாகக் ‘காவிரி மீட்புப் பயணம்’ என்ற பெயரில் திருச்சியிலிருந்து கடலூர் வரை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் உடனிருந்தனர். சந்திப்புக்குப் பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். “உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்னும் வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் என்ற முறையில் நீங்கள் அழுத்தம் தர வேண்டும். மே 3-ம் தேதி வரை காலம் கடத்தாமல் அதற்கு முன்னதாகவே மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக எதிர்க்கட்சிகள் நேரில் சென்று பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தோம் அதற்கு அவர் உங்களின் நிலைமை எனக்குப் புரிகிறது. உங்களின் கோரிக்கைகளை நிச்சயம் மத்திய அரசிடம் கொண்டு செல்கிறேன் என உறுதியளித்ததாகக் கூறினார். முதல்வர் ஏதோ ரோட்டில் செல்பவருக்கு கடிதம் அளிப்பதுபோல பிரதமர் டெல்லி புறப்படும் நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து மனு அளித்துள்ளார். இது வெறும் கண் துடைப்பு வேலை. அந்த மனுவில் வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்காது. எங்கள் ஆட்சியைக் காப்பாற்ற நீங்கள் துணை நிற்க வேண்டும். தயவு செய்து எங்கள் ஆட்சியைக் கலைத்துவிடாதீர்கள் போன்ற கோரிக்கைகளே இருக்கும். சட்டமன்றத்திலும் அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் நிச்சயம் அந்த மனுவில் இடம் பெற்றிருக்காது” இவ்வாறு குற்றம் சாட்டினார்.