தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்ததில் கால் மூட்டு விலகி சாலையில் தவித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள குமாரரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலையாண்டி என்பவரது மகள் கலைச்செல்வி. இவர் எட்டயபுரத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி, இன்று மதியம் குமராரெட்டியாபுரத்தில் இருந்து எட்டயபுரத்தில் உள்ள பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கல் தடுக்கி சாலை ஓரத்தில் விழுந்ததில், மாணவி கலைச்செல்வியின் இடது இடது கால் மூட்டு விலகியது.
வலி பொறுக்க முடியாத மாணவி, எழுந்திருக்க முடியாமல் அழுது கொண்டே சாலையில் கையை ஊன்றி அமர்ந்த நிலையில் இருந்தார். அவ்வழியே பள்ளிக்குச் சென்ற சக மாணவிகளும் கலைச்செல்வி அருகில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். கோவில்பட்டியில் உழவர் சந்தையில் வேளாண்மைத் துறை சார்பில் நடந்த விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக எட்டயபுரம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்த ஆட்சியர் வெங்கடேஷ், சாலையில் மாணவிகள் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்று மாணவிகளிடம் பேசினார். கல் தடுக்கி விழுந்ததில் கால் மூட்டு விலகிய செய்தி அறிந்ததும், உடன் வந்த அரசு ஜீப்களில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப்பில் மாணவியைத் தூக்கி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த மாணவிக்கு, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதல்சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாணவி உடன் 2 அரசு அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.