எதிர்வரும் ஜூலை மாதம் தாய்லாந்தின் பத்தயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில், தான் பங்கேற்க போவதில்லை என இத்தாலியில் வசித்துவரும் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்திடம் அறிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் உப தலைவர் ஜீ.எல்.எஸ் பெரேராவிடம் ‘வீரகேசரி ‘ வினவியபோது அவர் அதனை உறுதி செய்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“யுப்புன் அபேகோன், தற்போது இத்தாலியில் வசித்துவரும் யுப்புன், உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவிள்ள பல்வேறு வகையான போட்டிகளில் எதிர்வரும் மாதங்களில் பங்கேற்கவுள்ளதால் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையில் சீனாவில் நடைபெறவுள்ள, ஆசிய விளையாட்டு விழாவில் யுப்புன் அபேகோன் தவறாது பங்கேற்பார் “என்றார்.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10.14 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் வென்ற யுப்புன் அபேகோன், பொதுநலவாய விளையாட்டு விழாவின் தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்தார்.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10.14 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் யுப்புன் அபேகோன்.