யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை, திருத்தந்தை 14ஆம் லியோ ஆண்டகையினால் இன்று திங்கட்கிழமை (29) நியமனம் பெற்றுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப் பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையினால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றி வருகிறார்.
தற்போதைய ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










