றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூரியகுமார் யாதவ், நெஹால் வதேரா ஆகியோர் குவித்த அதிரடி அரைச் சதங்களின் உதவியுடன் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இப் போட்டிக்கு முன்பதாக அணிகள் நிலையில் 8ஆம் இடத்திலிருந்த மும்பை இண்டியன்ஸ் இந்த வெற்றியுடன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5 தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் இம்முறை ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை இதன் மூலம் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.
இந்தத் தோல்வியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 7ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இஷான் கிஷான் (42), ரோஹித் ஷர்மா (7) ஆகிய இருவரும் 4.4 ஓவர்களில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் வனிந்து ஹசரங்க டி சில்வாவின் 5ஆவது ஓவரில் 2 பந்துகள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (52 – 2 விக்.)
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ், நெஹால் வதேரா ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 3ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பைக்கு இலகுவான வெற்றி கிடைக்க உதவினர்.
சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 83 ஓட்டங்களையும் நெஹால் வதேரா 34 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் விஜயகுமார் விஷாக் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் 3 ஓவர்களுக்குள் விராத் கோஹ்லி (01), அனுஜ் ராவத் (06) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸும் க்ளென் மெக்ஸ்வெலும் 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 136 ஓட்டங்களாக உயர்த்தினர்.
டு ப்ளெசிஸ் 41 பந்துகளில் 65 ஓட்டங்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களை விட தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
கேதார் யாதவ், வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரெண்டோவ் 36 ஓட்டங்களக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.