பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் அழைத்து செல்லப்பட்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் கல்லூரி நாட்களில் பேருந்தில் பெண்களை உரசியதாக கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிக்பாஸ், சரவணனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினார். சரவணனும் மன்னிப்பு கேட்டார். அதோடு அந்த விவகாரம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் நேற்று முன் தினம் அந்த விவகாரத்தை மீண்டும் தூசு தட்டிய பிக்பாஸ் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என கூறிய பிக்பாஸ், அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார்.
சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் சொல்லிவிட்டு செல்ல கூட விடாமல் அவரை கன்ஃபெஷன் ரூமிலிருந்து வெளியேற்றினர் பிக்பாஸ் குழுவினர். கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார் .
சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். இந்த விஷயங்கள் நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டன.
சரவணன் கண்களை ஏன் கட்டி அழைத்து சென்றனர் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை பிக்பாஸ் வீட்டின் கட்டமைப்பு, சுற்றியுள்ள நிகழ்ச்சி தயாரிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட அறைகள் ஆகியவற்றை கண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் கண்களை கட்டி அழைத்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சரவணன் வெளியேற்றப்பட்ட விவகாரம் நீண்ட தாமதத்திற்கு பிறகு நேற்று சக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாண்டி, கவின், மதுமிதா உள்ளிட்டோர் கதறி அழுதனர்.
அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து சரவணன் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறிய பிக்பாஸ் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் சனிக்கிழமை தெரியப்படுத்தும் என்றார்.