சின்னத்திரையில் பிசியாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது படங்களிலும் தலைகாட்டுகிறார். வாணி ராணி சீரியலுக்குப் பிறகு அவர் நடித்த சந்திரகுமாரி சீரியல் எடுபடவில்லை. எனவே மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் ராதிகா சரத்குமார். இந்த படம் மே 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் மலையாளப் படமொன்றில் முக்கிய வேடமேற்று நடிக்க இருக்கிறார் ராதிகா சரத்குமார். ‘இட்டிமாணி மேட் இன் சைனா’ என்று அந்தப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர்களான ஜிஜி, ஜோஜு இணைந்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்குமுன் ஆரம்பமானது.
1985-ல் வெளியான ‘கூடும் தேடி’ என்ற மலையாள படத்தில் மோகன்லாலும், ராதிகாவும் இணைந்து நடித்தனர். சுமார் 34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது குறித்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் மோகன்லாலுக்கு தெரிவித்து டுவீட் செய்துள்ளார் ராதிகா சரத்குமார்.