இரண்டு நாள்கள் பயணமாக இன்று மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு அரசாங்கம் விசேட அதிரடிப்படையினரின் அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே இந்திய பாதுகாப்புச் செயலர் தலைமகயிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவர். அத்துடன், பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களையும் இந்திய பாதுகாப்புச் செயலர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள், குறித்தும், பாதுகாப்புச் செயலர்கள் மட்டத்தில் நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா கண்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

