நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாகவே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வகையில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இதுகுறித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஊடாகவே நாட்டில் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் பொலிஸில் இணைந்து கொள்ள விரும்பாவிட்டால், மலையகத்தில் தமிழ், சிங்கள மொழி பேசும் இளைஞர்கள் அதிகளவில் உள்ளார்கள் எனவே அவர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

