அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான முழுப் பொறுப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஏற்க வேண்டும் எனவும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையினால் பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் அவர்களுடன் தொடர்புள்ள மாகாண சபைகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாகாண சபைகள் மற்றும் 341 உள்ளூராட்சி சபைகளின் கீழ் பணிபுரியும் ஐந்தரை இலட்சம் அரச ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இரு அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டமை, வரவு செலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி தோற்கடிக்கச் செய்தமைக்கு சமனானது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

