வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்களை நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் தற்போது சிங்கள மொழி பேசக்கூடியவர்கள் அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களே மின் வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
எனவே இதுகுறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

