கடந்த சில வாரங்களாக மன்னார் மண்ணிலே கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் ஆயர் குருக்களைப் பற்றியும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற பதிவுகளையிட்டு கவலையடைவதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அந்த ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க குருக்கள், துறவிகளின் சமூகப்பணி அளப்பெரியது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இன, மத பேதமின்றி மக்களின் நலனிற்காக பல முன்னெடுப்புக்களை மன்னார் மறைமாவட்ட ஆயரும் அவரோடு இணைந்த குருக்களும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை.
திருக்கேதீஸ்வரம் கோயிலில் வளையு அமைக்கப்பட்டதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே ஆகும்.
இம் முறுகல் நிலையை அறிந்து நிலமையைச் சீர்படுத்த எமது கத்தோலிக்க குருக்கள் சென்ற போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டு கூடியிருந்த சிலர் ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டனர்.
அத்தோடு எமது கத்தோலிக்க குருக்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்டிருப்பதுடன் எமது மதகுரு மீது வன்முறைக்குற்றம் சுமத்தி அவரை ஒரு குற்றவாளியாகக் காட்டியிருக்கிறார்கள்.
நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எமது மதமும், எமது மதகுருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல. ஆனால் உண்மைக்காக எமது குரல் எப்போதும் ஒலிக்கின்றது என்பதை இந்தவேளையில் நினைவூட்டி நிற்கின்றோம்.
இந் நிகழ்வுகளை ஒருபக்கச் சார்பாகவும் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களையும் கத்தோலிக்க குருக்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
திட்டமிட்டு கத்தோலிக்க குருக்களையும் கத்தோலிக்க மக்களையும் வன்முறையாளர்களாகக் காட்டி நம்மீது மிகுந்த அனாகரிகமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
அவர்களின் கபடத்தனத்தால் நாம் பிளவு படவும் செய்துள்ளார்கள். உண்மையைச் சரியாக விளங்கிக் கொண்டு இது மறைசாட்சிகள் இரத்தம் சிந்திய மண்.
இங்கு நமது மறைக்காய் எழும் சூழ்ச்சியை செபத்தினாலும் எமது கத்தோலிக்க விசுவாசத்தின் நம்பிக்கையின் கோட்பாட்டாலும் வெல்ல ஒன்றித்து நிற்க அழைக்கின்றோம்’ என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

