வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடுகளிற்கு எதிராக வாக்களிப்பதென ஐ.தே.க எம்.பிக்களில் ஒரு பகுதியினர் எடுத்துள்ள முடிவு, இலங்கையில் பெரும் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தலாமென கருதப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் பெரும் அரசியல் பூகம்பங்களை அது ஏற்படுத்தலாமென கருதப்படுகிறது.
இந்த பூகம்பத்தின் உச்சமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வந்தாலும் வரலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் கீழ் உள்ள சுற்றாடல் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐ.தே.க எம்.பிக்கள் யாருக்கும் சிக்கலில்லை. ஆனால், மூன்றாவதாக, விசேட ஒதுக்கீடுகள் என்ற ஒரு ஒதுக்கீடு உள்ளது. இதன்கீழ்த்தான் ஜனாதிபதியின் இதர செயற்பாடுகள் எல்லாம் நடக்கிறது. விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சில தேர்தல் “ஸ்டண்ட்“ திட்டங்களையும் மைத்திரி செயற்படுத்துகிறார்தான். அதெல்லாம், விசேட ஒதுக்கீடுகள் என்ற பிரிவிற்குள்ளேயே வருகின்றன.
தேர்தலை குறியாக கொண்டு ஜனாதிபி செயற்படுத்தும் திட்டங்களிற்கு நிதியளிக்க கூடாது, இதன்மூலம் ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடலாம், அவரை அடுத்த முறை போட்டியிட வைக்காமல் ஒதுங்க வைக்கலாமென ஐ.தே.க எம்.பிக்கள் நினைக்கிறார்கள்.
ஆரம்பத்தில், இந்த நிலைப்பாட்டுடன் ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் 10, 15 பேர் வரையில் இருக்கலாமென கருதப்பட்டது. இந்த எண்ணிக்கையானவர்கள் என்றால், ரணில் விக்கிரமசிங்க அவர்களை கட்டுப்படுத்தி விடுவார் என்று மைத்திரியும் நம்பினார்.
ஆனால், இந்த விசயம் மைத்திரி போட்ட கணக்கையும் விட தீவிரமானது. அது இப்பொழுதுதான் மைத்திரிக்கு தெரிந்துள்ளது.
ஐ.தே.கவின் எம்.பிக்களில் 45 பேர் வரையில், ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்பதென தீர்மானித்துள்ளனர் என்ற தகவல் ஜனாதிபதிக்கும் வந்து சேர்ந்துள்ளது.
இவ்வளவு பெருந்தொகையானவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதால், இதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக மைத்திரி கருதுகிறார்.
தனது நிதி ஒதுக்கீடுகளிற்கு எதிராக ஐ.தே.கவினர் வாக்களித்தால், அதன்பின்னர் தான் யார் என்பதை காட்டுவேன் என ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அடுத்த சில வருடங்களிற்கு மீள முடியாத அரசியல் நெருக்கடியை ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, ஜனாதிபதி மூன்று பிரதிநிதிகளை அனுப்புவதும் இந்த முரண்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் இடம்பெற்றுள்ளது.
பிரமுகர்கள் கொலை சதி முயற்சியில் சம்பந்தப்பட்டுள்ள நாலக டி சில்வா இப்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதி முயற்சியில் அவர் சம்பந்தப்பட்டதற்கு ஆதாரமுள்ளதாக சி.ஐ.டி, அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல, அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் இதன் பின்னணியில் உள்ளதாக நாமல் குமார ஏற்கனவே சொல்லிவிட்டார். நாலக டி சில்வா அப்படியேதும் சொன்னாரா தெரியவில்லை. சொல்லியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
அந்த பிரமுகரை கைகாட்டினால், நாலக சில்வாவை பிணையில் விடலாம் என்ற இணக்கப்பாடு கூட எட்டப்படலாம். ஒருவேளை, நாலக அப்படி ஐ.தே.க பக்கம் கைகாட்டினால், அது ஒரு புளியங்கொப்பைத்தான் காட்டுவார். அதனடிப்படையில் அந்த பிரமுகர் கைது செய்யப்படலாம். விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை நடக்கும். அதில் அவர் குற்றவாளியில்லையென்றால் கூட, அதை நிரூபிக்க ஓரிரண்டு ஆண்டுகள் ஓடிவிடும்.
இந்த தகவல் அரசல் புரசலாக ஐ.தே.க தரப்பின் காதிலும் போடப்பட்டுள்ளதாக தகவல். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஐ.தே.கவினர் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.
எனினும், 13ம் திகதி ஜனாதிபதிக்கு கீழ் உள்ள விடயதானங்களிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இடம்பெறும். இதன்போது, நிலைமை எப்படியிருக்குமென்பது தெரிந்து விடும்.

