தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12 அன்று மிக பிரம்மாண்டமாக மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யாவின் 7 வயது மகள் ஆராத்யா பச்சன், நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்டோர் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல நடிகர்கள் உணவு பரிமாறிய விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் பச்சன் டுவிட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்கள் ஒருவர் அம்பானி வீட்டு திருமணத்தில் உணவு பரிமாறிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அபிஷேக், இது பாரம்பரியமாக மணமகள் வீட்டார் கடைபிடித்து வரும் வழக்கம். மணமகனின் வீட்டினரை அமரவைத்து, மணமகள் வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு விருந்து பரிமாறுவது பாரம்பரியம். இந்த பண்பாட்டு முறைக்கு ” சஜ்ஜன் கோட் ” என பெயர் என விளக்கம் அளித்துள்ளார்.

