ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க சிக்கல்? சசிகலா திடீரென வகுத்த திட்டம்!
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியமைப்பதற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சராக வேண்டும் என்கின்ற சசிகலாவின் கனவு தகர்ந்தது. இதேவேளை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
எனினும், அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும் என்றும், தான் சிறைக்குச் சென்றாலும் ஜெயலலிதாவின் கனவை பொய்ப்பிக்க விடமாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கும் சசிகலா, சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்திருக்கிறார்.
தனக்கு விசுவாசமாக இருக்கும் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் பயன்படுத்தி ஆட்சியமைப்பதற்கான அனுமதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கோரவுள்ளனர் என தெரியவருகிறது.
இன்று மாலை 5.30 இற்கு எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவினைத் தெரித்திருந்தார்.
எனினும், அவரை அப்பதிவியில் இருந்து நீக்கிய சசிகலா, செங்கோட்டையன அவைத்தலைவராக நியமித்திருந்தார்.
இப்பொழுது சட்டமன்ற குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் எடப்பாடிப் பழனிச்சாமி மூலமாக காய்களை நகர்த்துவதற்கான திட்டத்தை வகுத்திருக்கிறார் சசிகலா.
ஏனெனில், 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இப்பொழுதும் தமக்கு இருப்பதாக குறிப்பிடும் அவர், தான் சிறை சென்றாலும் ஜெயலலிதா உருவாக்கிய கட்சியையும் ஆட்சியையும் கொண்டு செல்வதற்கு உறுதி எடுத்திருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை கூவத்தூரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பார்ப்பதற்கு பன்னீர்செல்வம் விரைந்து சென்றிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதி வழங்கினால் மாத்திரமே முதலமைச்சராக அவர் அமரமுடியும். ஆனால், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் உண்மையான நிலவரம் குறித்து நேரில் சென்றால் மாத்திரமே அறிந்து கொள்ளமுடியும்.
சசிகலாவின் உத்தரவின்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவு சசிகலா தரப்பிற்குத் தான் என்று இப்பொழுதும் தெரிவித்து வருகிறார்கள் என அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் முதலமைச்சராவதற்கான சிக்கல் உருவாகியிருக்கிறது. ஆனால், தாம் பெரும்பான்மையை உறுதிப்படுத்த தயாராக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழக வளர்ச்சிப் பணிகள் தடைப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் திமுக, ஆளுநரை விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.












