2 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த பெண்: தரதரவென இழுத்து சென்று நெருப்பில் தள்ளிய மக்கள்
பிரேசில் நாட்டில் 2 வயது சிறுவனை எரித்து கொடூரமாக கொலை செய்த பெண்மணி ஒருவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் Novo Aripuana பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. முன் விரோதம் காரணமாக ஒரு குடும்பத்தையே நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற பெண்மணியை பொலிசார் கைது செய்து சிறை வைத்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 500 கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குறித்த பெண்மணியை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
பின்னர் தெரு வீதிவழியாக கூந்தலைப் பிடித்து தரதரவென இழுத்து சென்ற அந்த கும்பல் அவரை நெருப்புக்குள் தள்ளி தண்டனை வழங்க முயன்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்மணியை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களின் கோபத்துக்கு ஆளான அந்த பெண்மணி குறித்த வீட்டின் மீது நெருப்பு வைத்தபோது அந்த வீட்டில் 4 முதியவர்களும் 2 சிறுவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
அதில் இரண்டு வயது சிறுவன் தீ விபத்தில் உயிரிழந்ததாகவும் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது குறித்த பெண்மணியை பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.













