முதல்வர் சீ.விக்னேஸ்வரன் கனடாவிற்கு வருகின்றார் – முல்லைத்தீவு நகரம் மார்க்கம் நகரத்தின் இணை நகரமாகின்றது.
மார்க்கம் நகராட்சியின் கவுன்சிலரும், மார்க்கம் தோன்கில் தொகுதி கண்சவேட்டிவ் வேட்பாளருமான திரு. லோகன் கணபதி அவர்களின் அழைப்பின் பேரில் இந்த விவகாரம் இடம்பெறுகின்றது.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இத் திட்டத்தில் பணியாற்றி வரும் திரு.லோகன் கணபதி அவர்கள் இந்த வருகைக்கான ஏற்பாடுகளை கடந்த ஒக்டோபர் மாதம் லண்டனில் முதலமைச்சரையும், அவரது பிரதம அதிகாரியையும் சந்ததித்து ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் பிரகாரம் கனடா வரும் முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் மார்க்கம் நகரசபையுடன் கைச்சாத்திடும் விவகாரம் மற்றும் பிரம்டன் நகரசபையுடன் பேச்சுவார்த்தையுள்ள சமூகஞ்சார்ந்த சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
முதல்வர் அமைப்புக்களுடனான சந்திப்பையும், பத்திரிகையாளர் மாநாடொன்றை ஜனவரி மாதம் 6ம் திகதி நடத்தவும், பொதுமக்களுடனான சந்திப்பை ஜனவரி மாதம் 8ம் திகதி நடத்தவும் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கனடியத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் பங்குகொள்ளும் நிகழ்வாக இருக்கப் போகும் இந்த நிகழ்வில் கனடியத் தமிழர் தேசிய அவை, கனடிய தமிழர் பேரவை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு – கனடாக்கிளை, கனடிய மனிதவுரிமை அமைப்பு என்பவற்றின் தொண்டர்கள் ஒண்றினைந்தவகையில், இலண்டன் நிகழ்வில் இடம்பெற்றது போல, செயலாற்றுவார்கள் என்று நம்பப் படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளையானது வடக்கு கிழக்கு மாகாணசபைகளிற்கான தேர்தலிற்கான பெரும் நிதியை வழங்கியிருந்தது என்பதும், வடக்கு முதல்வர் கொழும்பைச் சேர்ந்தவர் என்ற பிரச்சாரத்தை முறியடிக்க பெருமளவு நிதியை வழங்கியிருந்ததும், அதனை அவர் நன்றியோடு நினைவு கூர்ந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.
முதலமைச்சரின் வருகைக்கான செலவுகள் மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தையும் மார்க்கம் நகரசபையே கவணிக்கிறது. எனவே மார்க்கம் நகர விருந்தாளியாக இங்கு தங்கியிருக்கும் காலத்தில் இருப்பார் எனத் தெரியவருகின்றது.இலங்கை விவகாரம் தொடர்பாக அக்கறையுள்ள கனடியத் தலைவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தவும் மையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.