இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 பிரதான அணிகளுக்கு இடையிலான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகம், அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறும் குறிக்கோளுடன் டிபெண்டர்ஸ் எவ்சியை இன்று பிற்பகல் எதிர்கொள்ள உள்ளது.
இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அப்கன்ட்றி லயன்ஸ் தனது 3 போட்டிகளிலும் இலகுவான வெற்றிகளை ஈட்டி 14 – 1 என்ற கொல்கள் வித்தியாசத்தில் 9 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
முன்னாள் மற்றும் சமகால தேசிய வீரர்கள் பலரை உள்ளடக்கிய அப்கன்ட்றி லயன்ஸ் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு முயற்சிக்கும் என்பது நிச்சயம்.
ஆனால், மறுபக்கத்தில் தனது இரண்டாம் நிலை அணியுடன் விளையாடிவரும் டிபெண்டர்ஸ் எவ்சி, முதலாவது வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்டத் தொடர் ஒன்றில் டிபெண்டர்ஸ் அணியின் பிரதான வீரர்கள் விளையாடுவதால் சுப்பர் லீக்கில் அதன் இரண்டாம் நிலை வீரர்களே விளையாடுகின்றனர்.
City & Local Guides
இரண்டாம் நிலை வீரர்களான போதிலும் அவர்கள் ஏனைய அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடி வருகின்றனர். டிபெண்ட்ர்ஸ் எவ்சி இதுவரை ஒரு கோலையும் போடாததுடன் எதிரணிகளுக்கு 5 கோல்களைக் கொடுத்து அணிகள் நிலையில் ஒரு புள்ளியுடன் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சி திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.











