தயாரிப்பு: கே.வி.என் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள்: விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பொபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், நாசர், சுனில், நிழல்கள் ரவி, ரேவதி மற்றும் பலர்.
இயக்கம்: ஹெச். வினோத்
மதிப்பீடு: 2.5/5
விஜய் நடிப்பில் தயாராகி, அவர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வெளியாகி இருக்கிறது. ‘ஜன நாயகன்’. இப்படத்தின் முழு காட்சிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி இருந்தாலும் தமிழ் மற்றும் விஜய் ரசிகர்களை மனதில் வைத்து இப்படம் ஜூலை 23ஆம் திகதியான இன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் விஜயின் வழக்கமான கொமர்சல் படமாக இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் சிறப்பம்சம் இருக்கிறதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
2013ஆம் ஆண்டில் மதுரை சிறையில் கைதியாக இருக்கும் தளபதி வெற்றி கொண்டான். அரசியல் கைதி ஒருவரை கொல்ல சிறைக்குள் வரும் ரௌடிகளை துவம்சம் செய்கிறார்.
சிறையில் கைதிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கலவரத்தை கட்டுப்படுத்தியதால் அந்த சிறைக்கு உயர் அதிகாரியாக பணியாற்றும் ஸ்ரீ காந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்) தின் குட் புக்கில் இடம்பெறுகிறார் தளபதி வெற்றி கொண்டான்.
அத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவனது தாயை சந்திக்க கௌதம் மேனன் அவரது சொந்த பொறுப்பில் சிறையில் இருந்து அழைத்து செல்கிறார். அப்போது கௌதம் மேனனின் மகளான விஜியும் (மமீதா பைஜூ) உடன் வருகிறார். தளபதியின் தாய் இறந்துவிட, அவருக்கு ஆறுதல் சொல்கிறார் விஜி. இதனால் தளபதிக்கும் விஜிக்கும் இடையே தந்தை – மகள் உறவு உருவாகிறது.
இந்த தருணத்தில் விஜியை சந்திக்க தளபதி சென்னைக்கு வருகிறார். அப்போது தளபதியிடம் விஜியை இராணுவத்தில் சேர்த்து தேச பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அவரது தாய் முடிவு செய்திருந்ததாகவும். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட்டார் என ஸ்ரீகாந்த், தளபதியிடம் பகிர்ந்துகொள்கிறார்.
அத்துடன் விஜிக்கு கூடுதலான ஒலியை கேட்டால் அவருடைய உடலில் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் அவளை, அவளுடைய தாயார் கண்ட கனவை தம்மால் நிறைவேற்ற முடியவில்லை என ஸ்ரீ காந்த்- தளபதியிடம் சொல்கிறார். இதற்கு பிறகு விஜிக்கு நான் எப்போதும் காவலாக இருப்பேன் என்கிறார் தளபதி. இதனை தொடர்ந்து தன் இயல்பான பணியை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் ஸ்ரீகாந்த் இறந்துவிட விஜியை அழைத்து வந்து தன் பாதுகாப்பில் வைத்து கொண்டு வளர்க்கிறார் தளபதி.
விஜி கல்லூரியில் உடன் படிக்கும் கார்த்திக் (டீஜே அருணாச்சலம்) கை காதலிக்க.. தளபதியோ.. விஜியை அவருடைய அம்மா கண்ட கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார். இதனிடையே சர்வதேச தீவிரவாதியான ஜான் ஹிம்லர் (பொபி தியோல்) சிறிது சிறிதாக இந்தியா முழுவதும் குழந்தைகள் விளையாடும் பொம்மை மூலம் ஆயுதங்களை குவித்து, சதி திட்ட பணியில் ஈடுபடுகிறார். இதனை கலீல் (நரேன்) எனும் விஞ்ஞானி கண்டுபிடித்து இது தொடர்பான தகவல்களை விஜி மூலமாக முதல்வரின் கவனத்திற்கு செல்கிறார்.
இதை அறிந்த ஜான் ஹிம்லர் – விஜியை கொல்ல முயற்சிக்கிறார். அவரை தளபதி பாதுகாக்கிறார். அதன்பிறகு தான் விஜி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதன் பின்னணியை தளபதி கண்டறிகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? விஜியின் உயிரைக் காப்பாற்ற தளபதி என்ன செய்கிறார்? ஜான் ஹிம்லரின் சதி திட்டம் என்ன? அதை தளபதி முறியடித்தாரா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
பெண்கள் உளவியல் ரீதியாக வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதையை விஜய் தெரிவு செய்திருப்பதை பாராட்டலாம். ஆனால் அதற்காக நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ எனும் தெலுங்கு திரைப்படத்தை அப்படியே மறு உருவாக்கம் செய்திருப்பது தான் சோதிக்கிறது.
வசனங்களில் சமகால அரசியல் நையாண்டி இடம்பிடித்திருப்பது விஜய் கட்சியின் இந்நாள் தொண்டர்களுக்கும் முன்னாள் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்.
“நோ லொஜிக் ஒன்லி விஜய் மேஜிக்” என திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பலம்-, பலவீனம். அதிலும் இரண்டாம் பாதி ஓஹோ…!
கயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவிற்கான காட்சிகள் குறைவு என்றாலும்.. அவரின் திரை தோற்றமும் திரை பங்களிப்பும் நிறைவு.
விஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மமீதா பைஜூவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கதாபாத்திரம் என்பதால்.. இயக்குநர் சொல்லிகொடுத்த மீற்றரில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
காவல் துறை அதிகாரி தளபதி வெற்றி கொண்டான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் வழக்கம் போல் மாஸான காட்சிகளில் அதிரடியாக எக்சன் காட்சிகளில் நடித்திருப்பதும்… ‘தளபதி கச்சேரி’ பாடலுக்கு தன் ஸ்டைலில் நடனமாடி இருப்பதும் ரசிகர்களுக்கு என்றென்றும் மறக்க முடியாத ஸ்வீட் மொமண்ட்ஸ். கங்கிராட்ஸ் விஜய்.
காவல் துறை அதிகாரி – அம்ரீஷ் பூஜாரி மற்றும் ஜான் ஹிம்லர் – சர்வதேச தீவிரவாதி என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் பொலிவுட் நடிகர் பொபி தியோல் திரை தோற்றத்தில் மிரட்டுகிறார்.
அனிரூத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை ஆட்டம் போடவைக்கிறது.
வழக்கம் போல் இசைஞானியின் பாடல்களை வசன காட்சிலும், சண்டை காட்சியிலும் பாவித்திருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.
ஜனநாயகன் – மக்கள் நாயகன்












