இந்திய திரையிசையுலகில் தனித்துவம் மிக்க பின்னணி பாடகியான எஸ்.ஜானகி (88) முதுமையின் காரணமாக இன்று இரவு 7:30 மணியளவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் காலமானார்.
1957 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘விதியின் விளையாட்டு’ எனும் படத்தில் தான் முதன் முதலாக பின்னணி பாடகியாக அறிமுகமானார் எஸ். ஜானகி. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, கொங்கணி, துளு, படுகா, பஞ்சாபி, சௌராஷ்ட்ரா ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சிங்களம், ஜேர்மன் என சர்வதேச மொழிகளிலும் பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார். இதுவரை இத்தனை மொழிகளில் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி யாரும் இல்லை என்ற புதிய சாதனையும் எஸ். ஜானகி நிகழ்த்தி இருக்கிறார்.
அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பக்தி பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார்.
ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது கிழவியின் குரலிலும் குரலை மாற்றிப் பாடக்கூடிய பிரத்யேகமான திறமையும் இவருக்கு உண்டு.
சிறந்த பாடகிக்கான இந்திய அரசு வழங்கும் தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ள இவருக்கு பத்ம பூஷண் எனும் உயரிய விருதும் வழங்கப்பட்டு இருக்கிறது.
முதுமையின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் எஸ்.ஜானகி.
”கொஞ்சும் சலங்கை’ எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் அந்தக் காலகட்டத்திலே பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசையுடன் இணைந்து இவர் பாடிய ‘சிங்காரவேலனே தேவா..’ என்ற பாடல் இன்று வரை தலைமுறைகளைக் கடந்து இசை ரசிகர்கள் விரும்பி கேட்கின்ற பாடலாக புகழ்பெற்று திகழ்கிறது.
இதைத்தொடர்ந்து எஸ். ஜானகி இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘அன்னக்கிளி’ படத்தில் பாடிய பாடல்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
அதைத் தொடர்ந்து 1970 – 1980களில் வெளியான அனைத்து தமிழ் திரைப்படங்களிலும் இவரது குரல் இடம்பெறாத பாடல்களை இல்லை என்ற நிலை உருவானது. ஒரே நாளில் நாலைந்து பாடல்கள் பாடும் அளவிற்கு பரபரப்பாக இயங்கினார் பாடகி ஜானகி.
ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர் பழகுவதில் மிகவும் எளிமையானவர்.
இவருடைய மறைவிற்கு தமிழ் திரை உலகில் பிரபலங்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்.












