டார்க் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : எம் ஜி. ஸ்டுடியோஸ் & ஃபைவ் ஸ்டார்
நடிகர்கள் : அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், மறைந்த நடிகர் கே. பாக்யராஜ், வி டிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி மற்றும் பலர்
இயக்கம் : கல்யாண் கே. ஜெகன்
மதிப்பீடு : 2/5
ஹாரர் திரில்லர் ஜேனரிலான படம்- ‘டாடா’ என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் கணேஷ் கே பாபுவின் கதை- என இரண்டு அம்சங்களை முன்வைத்து இப்படத்தைக்காண ரசிகர்கள் பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு படக் குழுவினர் அச்சத்தை திரை அனுபவமாக வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
முன்னணி திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக சேர்கிறார் ஓவியத்திலும், கதை எழுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இளைஞரான விக்னேஷ்( அஜய் கார்த்தி). இதற்காக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வருகை தருகிறார். மூன்று மாத பணிக்காக கருணாகரன் ( கே. பாக்யராஜ்) என்பவருடைய வீட்டின் மேல் தளத்தில் குறைந்த வாடகை என்பதால் அங்கு வசிக்க தொடங்குகிறார். அந்த வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று இளைஞர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இதனால் அந்த வீட்டை ‘பேய் வீடு’ என அந்தப் பகுதியினர் அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் கீழ்த்தளத்தில் அந்த வீட்டின் உரிமையாளரான கருணாகரனும் , அவருடைய மகளான பிரியதர்ஷினி( அஞ்சனா நேத்ரன்) யும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பேய் மீதும் அமானுஷ்யம் மீதும் நம்பிக்கை இல்லாத விக்னேஷ்- அங்கு தங்கி தன்னுடைய திரைப்பட பணிகளை மேற்கொள்ள தொடங்குகிறார். ஆனால் அந்த வீட்டில் அவருக்கு சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் விக்னேஷ் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார். அவர் தொடர்ந்து அதே வீட்டில் இருக்க விரும்புகிறார். அது ஏன்? என்பதற்கான காரணத்தை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
இந்த கதையை கருணாகரன் என்பவரது மரணம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து அதனை பாலச்சந்தர் ( நட்டி நட்ராஜ்) என்ற காவல்துறை அதிகாரி விசாரிக்க தொடங்குகிறார். அவரது விசாரணையின் மூலமாக என்ன நடந்தது ? என்பதனை பார்வையாளர்களுக்கு விவரிக்கும் வகையிலான திரைக்கதையில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் சில இடங்களில் சிறிய அளவில் ரசிகர்களுக்கு ஆறுதலான அனுபவம் கிடைக்கிறது.
முதல் பாதியில் ஒரு காட்சியிலும், இரண்டாம் பாதியில் இரண்டு காட்சியிலும் மட்டுமே ஹாரர் ஜேனரிலான திரைப்படங்களை பார்க்க தொடங்கி இருக்கும் முதல் கட்ட ரசிகர்களுக்கு அச்சம் ஏற்படக்கூடும். இது போன்ற படங்களை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் எந்த இடத்திலும்… எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை.
விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அஜய் கார்த்தி திரையை அதிக அளவில் ஆக்கிரமித்து ரசிகர்களை சோதிக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் பேய் வீட்டிற்கு தன் அம்மா வருவது போன்ற காட்சி… ரசிகர்களை வியக்க வைக்கப் போகிறது என எதிர்பார்த்தால்… அங்கேயும் இயக்குநர் ரசிகர்களை ஏமாற்றுகிறார்.
ஆனால் அந்தக் காட்சியில் நடிகர் அஜய் கார்த்தியின் நடிப்பு சிறப்பு.
அந்த பேய் வீட்டின் உரிமையாளர் கருணாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே. பாக்யராஜை திரையில் காணும் போது… கண்களில் கண்ணீர் கசிகிறது.
பாலச்சந்தர் என்ற கம்பீரமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நட்டி நட்ராஜ் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிரியதர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ச்சனா நேத்ரன் திரையில் அழகாக தெரிந்தாலும் அவருக்கான காட்சி மிகக் குறைவு என்பதால் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
விக்னேஷின் நண்பர் சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிபி சக்கரவர்த்தியின் நடிப்பு பக்கா.
ஹாரர் திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை பிரதானமானது. ஆனால் இந்தப் படத்தில் அது ரசிகர்களை எந்த இடத்திலும் பயமுறுத்தவில்லை.
இந்தப் படத்தை குறைந்தபட்ச ரசிகர்கள் விருப்பத்துடன் காண்பதற்கு ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் தான் காரணம் என சொல்லலாம்.
டார்க் – நோ ஸ்பார்க்













