இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெற்ற அணிகளில் ஒன்றான இலங்கை, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2028 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றது.
அத்துடன் ஐசிசியினால் அடுத்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இலங்கையில் நடைபெறவுள்ளது. வரவேற்பு நாடு என்ற வகையில் அப் போட்டியிலும் இலங்கை நேரடியாக விளையாட தகதிபெற்றுள்ளது.
பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இரண்டு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளே 2028 இல் நடைபெறவுள்ள 11ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
ஏ குழுவிலிருந்து அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியனவும் பி குழுவிலிருந்து இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை. நியூஸிலாந்து ஆகியனவும் 2028 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
வரவேற்பு நாடு என்ற வகையில் பாகிஸ்தானும் அப் போட்டியில் நேரடியாக விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
2026 ஜுலை 6ஆம் திகதியன்று மகளிர் ரி20 உலகக் கிண்ண தரவரிசையில் அடுத்த உயரிய இடத்தைப் பெறும் அணி பத்தாவது அணியாக மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இணைந்துகொள்ளும்.
இப்போதைக்கு அயர்லாந்து 201 தரவரிசை புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது.
இலங்கையில் ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம்
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை நேரடியாக பங்குபற்றும்.
அத்துடன் மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தரவரிசையில் இப் போதைக்கு முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன மகளிர் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாட தகதிபெற்றுள்ளன.












