தயாரிப்பு : ஏ. கே. மூவிஸ்
Movies
நடிகர்கள் : ஜனனி, விசாகன், கௌஷிக், ஹரிஹரன் ராஜூ, ரமேஷ் கண்ணா, சபீதா ஆனந்த், சிவன் சீனிவாசன், திலீபன், பொய்ஸ் ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் : ஏ. கே. குமார்
மதிப்பீடு : 2/5
‘பிக் பொஸ்’ புகழ் நடிகை ஜனனி நடித்திருக்கும் படம் என்பதாலும் லேட்டஸ்ட் சினிமா ட்ரெண்டான க்ரைம் திரில்லர் ஜேனரிலான படம் என்பதாலும் ‘நிழல்’ படத்தைக் காண ரசிகர்கள் படமாளிகைக்குள் சென்றனர். அவர்கள் எதிர்பார்த்து சென்ற இரண்டு விடயங்களும் நிறைவாக கிடைத்ததா ?இல்லையா ?என்பதை தொடர்ந்து காண்போம்.
உல்லாசமாக இருக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகனான விஜய் ஹரி ( ஹரிஹரன் ராஜூ) மற்றும் அவனது நண்பர்கள் இருவரையும், ரம்யா ( ஜனனி) என்ற பெண் கொடூரமாக தாக்கி, மரணத்தின் விளிம்பில் இருக்கும் தருணத்தில்.. அவர்களை அருகில் இருக்கும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஹரியின் தாயார் காவல்துறை உதவியுடன் விசாரிக்க தொடங்குகிறார். அவரது விசாரணையில் ரம்யா என்ற பெண்ணைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிறது. அது என்ன? என்பதும்.அதன் பிறகு என்ன நடந்தது? என்பதும்.. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற பின், நீதிமன்றம் எம்மாதிரியான தீர்ப்பை வழங்கியது? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் – தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக அவரே களத்தில் இறங்கி குற்றவாளிகளை கண்டறிகிறார். பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கும் வகையில் காட்சிகள் நகர்வதால் உற்சாகத்திற்கு பதிலாக சோர்வு தான் மிஞ்சுகிறது.
காவல்துறை விசாரணைகள்- நீதிமன்ற நடைமுறைகள்- என எதிலும் படைப்புக்கான ஜீவன் இல்லை. மேலும் பட்ஜட் படைப்பு என்பது திரை மொழியில் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் சின்னத்திரையில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால் உடல் மொழி – திரை மொழி – என எதிலும் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கான காட்சி மொழியும் மிஸ்ஸிங்.
ரம்யா -சரண்யா என்ற இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் :பிக் பொஸ் ‘ ஜனனியின் நடிப்புதான் இப்படத்தின் பலம்.
ரமேஷ் கண்ணா அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் விசாகன் நடிப்பை காட்டிலும்.. எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். சட்டத்தரணியாக நடித்திருக்கும் நடிகர் கௌஷிக் நீதிமன்றில் காட்சிகளின் பரபரப்புக்கு பயன்பட்டிருக்கிறார்.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை- பாலியல் வன்கொடுமை- அதிகார துஷ்பிரயோகம் – காவல் துறையினரின் அணுகுமுறை- அது தொடர்பான நீதிமன்ற நடைமுறைகள்- தாமதமாகும் தீர்ப்புகள்- என பல விடயங்கள் பேசப்பட்டிருப்பதால் ஒரு பிரிவினருக்கு இது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாகும்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சிறிய முதலீட்டு படைப்புகளுக்கான தரத்தில் அமைந்துள்ளது.
நிழல் – சுடாத பழம்












