பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி – மன்னார் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக அறிவிக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (8) பகல் ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் பா.ஜேக்குமார், கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம், கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கணேசபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அக்குழுவினர் குறித்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கையில் மேலும் கூறுகையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் நகர பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்தவுள்ளது.
இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
எனவே கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை இந்த நாட்டில் இல்லாமற்செய்து, சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், சர்வமத தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.
இப்போராட்டம் அரசுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, குறித்த இளைஞரின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதோடு, இந்த பயங்கரவாத தடைச் சட்டமும் மாற்றப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஊடக சந்திப்பு வேளையில் முன்வைத்துள்ளனர்.











