எம் மண்ணை சார்ந்தவர்களையும் , தமிழ் சினிமாவையும் எளிதாக பிரிக்க இயலாது. தமிழ் சினிமாவில் தடம் பதிப்பதற்காக புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தொடர்ந்து பாரிய முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் லண்டன் வாழ் ஈழத்தமிழரான துஷாந் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் மீதுள்ள பற்றின் காரணமாக லண்டன் வாழ் ஈழ தமிழரான துஷாந் சென்னையில் டங்ஸ்டன் இன்டர்நேஷனல் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனம் தற்போது புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. இதில் பங்கு மற்றும் படைப்புகளை முன்னணி இயக்குநர்கள் தெரிவு செய்து, எதிர்வரும் 25 ஆம் திகதியன்று நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் ரொக்க பரிசினை வழங்குகிறார்கள்.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளரான துஷாந் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஏனைய நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அந்த தருணத்தில் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.