நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றபோது, வெளியிடங்களில் வேலைசெய்யும் மக்கள் நிழல் சார்ந்த இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நோயாளிகளை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்த வாகனங்களில் பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டாம். அடிக்கடி நீராகாரம் பருக வேண்டும். வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிதல் பொருத்தமானதாகும்.
குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

