தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.
மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை கடல் பிராந்தியங்களில், நாட்டிற்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது வடகிழக்குத் திசையினூடாக நகர்வதுடன் மேலும் நலிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தின் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே இக்கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 40 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

