இலங்கையில் வாக்குரிமை கொண்ட ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த பிரஜைக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்
நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்
அது ஒரு சங்க மாநாடு என்று அழைக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளின் பிரதிநிதித்துவமும் அங்கு காணப்படவில்லை என்பது எனது கருத்து. அங்கு மிகக் குறைந்த அளவிலான பிக்குகளே கலந்துகொண்டனர். குறிப்பாக, குறிப்பிட்ட சில அரசியல் இலக்குகளைக் கொண்ட, இனவாதப் போக்குகளை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடனேயே அந்த மாநாடு அமைந்திருந்தது.
அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கேட்கும் போது, இது ஒரு மாறுபட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகப் புரிகிறது. எனவே, இவ்வாறான சங்க மாநாடுகள் மூலம் இலங்கையின் விசேட ஆட்சியை அல்லது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் சமமானது என்ற போதிலும், மத அடையாளங்களைப் பயன்படுத்தி இனவாதத்தைத் தூண்டுவதையும், அதன் ஊடாக ஆட்சியைத் தீர்மானிக்க முயல்வதையும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

