1983 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற டி ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா ‘ எனும் திரைப்படம் – காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 13-ஆம் திகதியன்று மீண்டும் வெளியாகிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
‘ அஷ்டவதானி ‘ டி. ராஜேந்தர் ‘செயின் ஜெயபால்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து நான்கு தசாப்தங்களுக்கு முன் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கு மீளுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் திரையில் வெளியிடப்படுகிறது.
இதனை இன்றைய இளம் தலைமுறை டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நிகழ்வொன்று சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு , இயக்குநர்கள் விக்ரமன் – ஆர். கே. செல்வமணி படத்தில் நாயகியாக நடித்த நளினி , படத்தை இயக்கி தயாரித்து நடித்து இருந்த டி . ராஜேந்தர் ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் டி. ராஜேந்தர் பேசுகையில், ”நல்ல கலைஞன் என்பதை விட நான் மிகச் சிறந்த ரசிகன். உயிருள்ள வரை உஷா படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் அறிமுகமான நடிகை நளினியும் ஒரு காரணமாகும். இந்த திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மீளுருவாக்கம் செய்வதற்காக 38 நாட்கள் வரை பணியாற்றினோம். டி ஆர் டிஜி மியூசிக் எனும் புதிய நிறுவனத்தின் சார்பில் பெப்ரவரி 13 ஆம் திகதியன்று வெளியாகிறது” என்றார்.
