இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 6 விக்கெட்களால் இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் மேலும் ஒரு போட்டி மீதம் இருக்க தொடரை இப்போதைக்கு 2 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியது.
மழையினால் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் திருத்தப்பட்ட 17 ஓவர்களில் 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 16.4 ஓவர்களில் (173 – 4 விக்.) மிக இலகுவாக கடந்து இங்கிலாந்து மகத்தான வெற்றியீட்டியது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 7.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 9.27 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
ஒரு மணித்தியாலம் 13 நிமிடங்கள் தாமதத்தின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 17 ஓவர்களில் 168 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.
அதாவது இங்கிலாந்தின் வெற்றிக்கு மீதம் 9.4 ஓவர்களில் மேலும் 111 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது தனது ஓவரைப் பூர்ததி செய்ய ஆரம்பித்த ஏஷான் மாலிங்க ஒரு பந்தை வீசியதுடுன் இடது தோள்பட்டையில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றார். அவரது ஓவரை ஜனித் லியனகே பூர்த்திசெய்தார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் இறங்கிய இங்கிலாந்து, 8ஆவது ஓவரில் மீதம் இருந்த 4 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டு ஓவர்களைத் தவிர மற்றைய எல்லா ஓவர்களிலும் 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.
பில் சோல்ட் (1), ஜேக்கப் பெத்தெல் (13) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (38 – 2 விக்)
இதனைத் தொடர்ந்து ஜொஸ் பட்லர் (39), டொம் பென்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து டொம் பென்டன், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் 20 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை சிறப்பான நிலையில் இட்டனர்.
ஹெரி ப்றூக் 12 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 36 ஓட்டங்களைக் குவித்தார்.
அதன் பின்னர் டொம் பென்டன், சாம் கரன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
டொம் பென்டன் 33 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களுடனும் சாம் கரன் 14 பந்துகளில் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மதீஷ பத்திரண 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.
ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்று நான்காவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடத் தயார் என்பதை நிரூபித்தார்.
முன்வரிசை வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ் ஆகிய மூவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதிலும் 30களில் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
அதனை பின்னர் பவன் ரத்நாயக்க நிவர்த்தி செய்தார்.
பெத்தும் நிஸ்ஸன்க (34), காமில் மிஷார (36) ஆகிய இருவரும் 33 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகர்ந்து இலங்கைக்கு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து காமில் மிஷார, குசல் மெண்டிஸ் (32) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க (01) களம் விட்டு வெளியேறினார். (131 – 4 விக்.)
குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புக்குப் பின்னர் இலங்கையின் ஓட்ட வேகம் வெகுவாக குறைந்தது. 13ஆவது ஓவருக்கும் 16ஆவது ஓவருக்கும் இடையில் அதாவது 4 ஓவர்களில் இலங்கை 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்ளை இழந்தது.
எனினும், ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட பவன் ரத்நாயக்கவும் சரித் அசலன்கவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர்.
பவன் ரத்நாயக்க 22 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
சரித் அசலன்க 22 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: டொம் பென்டன்.

