திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார்.
இன்று ஞாயிற்றுக்கழமை (04) வெல்வேரி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றையதினம் திருகோணமலை மாவட்ட பட்டணமும் சூழலும் பிரதேச செயலக்திற்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.குறித்த மக்கள் பல வருடங்களுக்கு முன்னர் வன்செயலின் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இந்நிலையில் தற்போது அவர்களுடைய வாழ்வாதார பிரச்சினை எழுந்திருக்கின்றது.
இன்றைய தினம் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் போதியளவு காணப்படுகின்றன. அங்கு விவசாயம் மேற்கொண்டதற்கான கிணறுகள், வயல்நிலங்கள், எஞ்சிய கட்டுமானங்கள் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் இவற்றுக்கான ஆவணங்களையும் குறித்த மக்கள் வைத்திருக்கின்றார்கள் எனவே இவை போதுமானவையாக இருப்பதாக நம்புகின்றேன். இந்த அடிப்படையில் பல்வேறுபட்ட இடங்களில் வன பரிபாலன திணைக்களத்திடமிருந்து காணிகளை விடுவித்து மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம்.
அந்தவகையில் வெல்வேரி மக்களுடைய காணிகளையும் விரைவில் வன பரிபாலன திணைக்களத்திடமிருந்து விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை – வெல்வேரி கிராமத்தில் பல தசாப்த காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வாழ்ந்து வந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான வன்செயல் காரணமாக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அங்கிருந்து தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்து வந்தனர்.
இந்நிலையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பின் காரணமாக மீண்டும் மீள குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த பகுதியில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் இடப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த காணி ஹெட்டியாராய்ச்சி என்ற நபருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனினும் அவர் அதில் எந்தவொரு நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொண்டிருக்கவில்லை.
1970 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் தாங்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களாக வீட்டின் சிதைவுகள், சீமேந்தால் கட்டப்பட்ட சுமார் 10 அடி விட்டமுடைய பல கிணறுகள், நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள் உட்பட பல ஆதாரங்களும் தமது காணிக்கான ஆவணங்களும் வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் தமது காணியைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட தமது காணிகள் மாத்திரம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.








