தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘அகண்டா 2 : தாண்டவம்’ எனும் திரைப்படம் – இந்துக்கள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை- ஆன்மீகத்தை கொண்டாடும் படம் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகண்டா 2 :தாண்டவம்’ எனும் திரைப்படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, வை. ஜி. மகேந்திரன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ராம் பிரசாத் & சந்தோஷ் டெடாகே ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.
ஆன்மீக உணர்வை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி சந்த் அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி வழங்குகிறார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் அதாவது நாளை முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை தமிழில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படத்தின் நாயகன் நந்தமூரி பாலகிருஷ்ணா- இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – வை. ஜி. மகேந்திரன்- விஜி சந்திரசேகர் – எக்ஸிக்யுடிவ் புரொடியுசர் கோட்டி ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு பேசுகையில், ” அகண்டா 2 தாண்டவம் எனும் திரைப்படம் இந்தியாவில் வாழும் இந்துக்கள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை – ஆன்மீகத்தை கொண்டாடும் படமாக உருவாக்கி இருக்கிறோம். இது பாரத தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கான படமாக உருவாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் கொமர்சலாக வழங்கியுள்ளோம் ” என்றார்.
இதனிடையே இந்த திரைப்படத்தில் பிரகலாதன் வேடத்தில் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனுவின் வாரிசான வர்ஷித் நடித்திருக்கிறார் என்பதும், கதையின் நாயகனான நந்தமூரி பாலகிருஷ்ணா இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

