டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமை குறித்து கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேசத் தலைவர்கள் பலர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் , இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகளுடன் கூடிய அனர்த்த நிலைமை குறித்து, நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இரவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

