சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (9) கைசாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோருக்கிடையில் கைசாத்திடப்பட்டது.
2026ஆம் ஆண்டிற்கான இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.
கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கான அதிகாரபூர்வ ஹஜ் கோட்டா 3,500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், 2025 ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முடிப்பதற்கு சவூதி அதிகாரிகள் செய்த சேவைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றியை பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துக்கொண்டதுடன், 2026இல் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இணைந்து வினைத்திறனான ஹஜ் சேவையை உருவாக்க இலங்கை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறிப்பாக ஹஜ் சட்டம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கினார்.
இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லர், குழுவின் பங்கு மற்றும் எதிர்வரும் ஹஜ் யாத்திரைகளுக்காக செயல்படுத்தப்படும் செயல்முறைகள் குறித்தும் விளக்கினார்.
இதேவேளை, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தௌபீக் பௌஸான் அல் ரபியாவை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஹஜ் சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடுவதற்கும் உத்தேசித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜித்தாவில் உள்ள பதில் தூதர் மஃபூசா லாபீர், வைத்தியர் அசிஸ் முகமது ஷிஹான் மற்றும் கலாநிதி எம்.என்.எம். அஷ்ரஃப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



