ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 112,348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7,459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையும், 104,889 ஆவணங்கள் இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையும் ஆகும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிகப்பாதுகாப்பான டிஜிட்டல் ஆதாரத்திரட்சிக் கட்டமைப்பின் ஊடாகப் பேணப்படுவதாகவும், இவற்றில் மீறல்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாகவும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ எனும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இச்செயற்திட்டத்தின் ஓரங்கமாக இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, உரியவாறு மதிப்பீடு செய்யப்பட்டு, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழான வழக்குத்தொடரல் தேவைப்பாடுகளுக்காக உரியவாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின்கீழ் இயங்கும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் 112,348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. இவற்றில் 78,151 ஆவணங்கள் இலங்கை தொடர்பான ஐ.நாவின் முன்னைய விசாரணை அறிக்கைகளில் இருந்தும், 34,197 ஆவணங்கள் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினாலும் திரட்டப்பட்டவையாகும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் மீறல்கள் பற்றிய தகவல்கள், ஆதாரங்கள், சிவில் அமைப்புக்களின் அறிக்கைகள், நேர்காணல்கள், அறிக்கைகள், காணொளிகள், புகைப்படங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
அதேவேளை செப்டெம்பர் மாதம் வரையில் திரட்டப்பட்டுள்ள 112,348 ஆவணங்களில் 7,459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையாகவும், 104,889 ஆவணங்கள் இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையாகும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற 104,889 ஆவணங்களில் 0.5 சதவீதமானவை நேர்காணல்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்களும், 1.3 சதவீதமானவை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற்ற தரவுகளும், 1.9 சதவீதமானவை நீதிமன்ற ஆவணங்களும், 23.2 சதவீதமானவை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற்ற அறிக்கைகளும், 27.6 சதவீதமானவை மின்னஞ்சல், கடிதங்கள், கூட்ட அறிக்கைகள் உள்ளிட்ட ஏனையவையும், 45.5 சதவீதமானவை பாதிக்கப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டவையும் ஆகும்.
அதேபோன்று ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை வசமுள்ள ஆவணங்களில் 37,905 ஆவணங்கள் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பானவையும், 48,070 ஆவணங்கள் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பானவையும், 32,099 ஆவணங்கள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறல்கள் தொடர்பானவையும், 9,163 ஆவணங்கள் சிறுவர்களுக்கு எதிரான மிகப்பாரதூரமான மீறல்கள் தொடர்பானவையும், 26,185 ஆவணங்கள் சித்திரவதைகள் தொடர்பானவையும் ஆகும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிகப்பாதுகாப்பான டிஜிட்டல் ஆதாரத்திரட்சிக் கட்டமைப்பின் ஊடாகப் பேணப்படுவதாக இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த ஆவணக்களஞ்சியம் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதாகவும், மீறல்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாகவும் அச்செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.