வட மாகாண ஆசிரியர்கள் இன்று (15) மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பின்தங்கிய பிரதேசம் மற்றும் அதிகஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் வட மாகாண ஆசிரியர்கள் திங்கட்கிழமை (13) முதல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தின்போது ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்தவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்டகளத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது.




