தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (25) நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர சபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவுத் திடலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவுகூரும் விதமாக இன்றைய நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், மாநகர மேயர் சு.காண்டீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.