ஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை உண்டு. இவ்விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும். அவை இலங்கை எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி சகல இலங்கையர்களுக்குமானது எனும் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கின்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை வியாழக்கிழமை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து அச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ‘எக்ஸ்’ தளப்பதிவைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குறித்த நபரின் கைதுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். அதன்விளைவாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலையீட்டை அடுத்து அந்நபர் கடந்த திங்கட்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘ஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை உண்டு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ‘யாரேனும் ஒருவர் உரிய பாதுகாப்புசார் நடைமுறைகளைப் பூர்த்திசெய்திருப்பின், அவரால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனும் பட்சத்தில், அவர் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவதுடன் மாத்திரமன்றி, அதனை பெரிதும் வரவேற்கவும் வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஒருபுறம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோருகின்றார்கள் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் நாடு திரும்புபவர்களை அச்சுறுத்தவோ, அவமரியாதைக்கு உட்படுத்தவோ கூடாது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இவ்விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கான நகர்வு என்பதுடன், அவை பாராட்டப்படவேண்டியவையாகும். அந்நடவடிக்கையானது இலங்கை என்பது எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி சகல இலங்கையர்களுக்குமானது எனும் தெளிவான செய்தியையும் சொல்லியிருக்கின்றது. பல்லினத்தன்மை என்பது சுமை அல்ல. மாறாக அதுவே எமது பலமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.