நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாம் எனும் மாநகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் புகழ் பெற்றது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி – சூரி – அஞ்சலி நடிப்பில் உருவான ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த விழாவிற்கு வருகை தந்திருந்த சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘மறுபடி நீ..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான ராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ இதில் மலையாள நட்சத்திர நடிகர் நிவின்பாலி, நடிகை அஞ்சலி, நடிகர் சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்ததால்… இப்படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘போர் எதுவும் இல்லை வேறு எதுவும் இல்லை..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, நடிகர் சித்தார்த்தும், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலின் இறுதியில் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு குரலும் இடம்பெற்றிருப்பதால் எம்முடைய மண்ணின் ரசிகர்களுக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது.