பொருளாதாரப் பாதிப்பினால் பெருந்தோட்டப் பகுதியில் 42.8 சதவீதமான குடும்பங்கள் கடனாளியாகியுள்ள நிலையில் மொத்த சனத்தொகையில் 91 சதவீதமானோரின் மாத செலவுகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் தொழிலின்மை வீதம் 14.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது பொருளாதார பாதிப்புக்களினால் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் மொத்த சனத்தொகையில் மதிப்பீடு செய்யப்பட்ட 62 இலட்ச குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு விசேட நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 60.5 சதவீதமான குடும்பங்கள் மாத வருமானத்தை இழந்துள்ள நிலையில் 91 சதவீதமானோரின் மாத செலவுகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன.
பொருளாதார பாதிப்பினால் மொத்த சனத்தொகையில் 22 சதவீதமானோர் கடனாளியாகியுள்ள நிலையில் அதில் நகர் புறத்தை சேர்ந்த 24.3 சதவீதமான குடும்பங்களும், கிராம புறத்தில் 20 சதவீதமான குடும்பங்களும்,பெருந்தோட்டப் பகுதியில் 42.8 சதவீதமான குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. கடனாளியாகியுள்ளனர்.
அத்துடன் குறுகிய காலத்துக்குள் தொழிலின்மை 14.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையினர் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.
தேசிய மட்டத்திலான தொழிற்றுறையை மேம்படுத்த மூலப் பொருள் அல்லாத உற்பத்திகளின் இறக்குமதிகளை மட்டுப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
வணிக கடன் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் தொடர்பில் மிதமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறையினரின் மேம்பாட்டுக்காக 168 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் முயற்சியாளர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் கடன் வழங்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.