பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5,10 பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த வொரு பொலிஸ் பாதுகாப்பு இல்லை. அவ்வாறான நிலையில் அவரை கைது செய்த முறை தவறானது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஏழுப்பிய ஒழுங்குப்பிரச்சினையில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, என்னையும் தொடர்புகொண்டு கதைத்தார். உங்களை தொடர்புகொண்டு, பாராளுமன்றத்துக்கு வந்து சிறப்புரிமையை முன்வைத்த பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நான் அவருக்கு தெரிவித்தேன்.
அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்,பி.க்கு பாெலிஸ் பாதுகாப்போ மெய்ப்பாதுகாவலர்களோ இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5, 10 பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவருக்கும் எந்த பொலிஸ் பாதுகாப்பு இல்லை. தனது சாரதியுடனேயே அவர் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்கிறார். மிகவும் அமைதியான ஒருவர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு வரும்போதும் பாராளுமன்றத்தில் இருந்து செல்லும்போது பொலிஸாரால் கைதுசெய்ய முடியாது, அவ்வாறு கைது செய்ய சபாநாயகர் அனுமதிக்கவும் கூடாது என்றார்.
