மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (06) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் வெள்ளத்தம்பி என்பவரே இவ்விபத்தத்தில் பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று மாலை வழக்கம் போல் குறித்த ஆற்றுப்பகுதிக்கு இறால் பிடிப்பதற்கு தனது தோணியில் சென்றிருந்த போது அன்றைய தினம் ஆற்றுப்பகுதியில் திடிரென ஏற்பட்ட அதிகமான காற்றினால் குறித்த நபரின் தோணி நீரில் கவிழ்ததனை கண்ட அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் குறித்த நபரினை மீட்டெடுத்து மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்ர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













