தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றுக்கொண்டது.
பொச்சேவ்ஸ்ட்ரூம் ஜே. பி. பார்க் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) மிகவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது.
மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து சார்பாக மூவர் மாத்திரமே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்ளைப் பெற்றனர்.
ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ் 20 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீராங்கனை அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ஓட்டங்களையும் ஜொசி க்ரோவ்ஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
உதிரிகளாக 17 ஓட்டங்கள் கிடைத்தது.
பந்துவீச்சில் சியன்னா ஜிஞ்சர் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெகி க்ளார்க் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எலா ஹேவோர்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
100 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இங்கிலாந்தைப் போன்று அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்திலும் மூவர் மாத்திரமே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மத்திய வரிசை வீராங்கனைகளான க்ளயார் முவர் 20 ஓட்டங்களையும் எலா ஹேவோர்ட் ஓட்டங்களையும் அமி ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஹன்னா பேக்கர் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ் 3.5 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியனைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி பொச்சேவ்ஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெறவுள்ளது.