‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் சர்வதேச அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்றிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களை இயக்கி வெற்றி திரைப்பட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக பொலிவுட் இளம் கனவு கன்னி திஷா படானி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி, ஒரியா என 10 மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ” படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் மோஷன் போஸ்டர் பாணியில் வெளியிடப்படும்.
இதன் போது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இடம்பெறும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவாவில் தொடங்கும்.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மேலும் தாமதமாவதாலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருப்பதாலும், சூர்யா, சிவாவின் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக திரையுடாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யா பொலிஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












