‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் 2011ம் ஆண்டில் இசை உலகையே ஒரு கலக்கு கலக்கியது. யு-டியூபில் ஒரு இந்தியா வீடியோ, அதுவும் தமிழ்ப் படப் பாடல் வீடியோ மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு பல பாடல்கள் வந்து சில சாதனைகளைப் படைத்தாலும் ‘கொல வெறி’ சாதனையை எந்தப் பாடலாலும் மிஞ்ச முடியவில்லை. தான் எழுதி பாடிய ‘கொல வெறி’ சாதனையை மீண்டும் தனுஷே எழுதிப் பாடி முறியடித்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘மாரி 2’ படத்தில் தனுஷ் எழுதி தீ என்ற பாடகியுடன் சேர்ந்து பாடிய ‘ரவுடி பேபி’ பாடல் 42 நாட்களில் 200 மில்லியன், அதாவது 20 கோடி பார்வைகளை யு டியூபில் பெற்று மீண்டும் ஒரு புதிய, பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்திய சினிமா பாடல்களில் குறைந்த நாட்களில் 200 மில்லியன் என்ற சாதனையை கடந்த ஆண்டு டிசம்பரில் யு டியூபில் வெளியான ‘சிம்பா’ பட ‘ஆன்க் மேரே’ பாடல் 25 நாளில் படைத்தது. அந்தப் பாடலுக்கு அடுத்து 42 நாட்களில் ‘ரவுடி பேபி’ பாடல் 200 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு ஹிந்திப் பாடலுக்கு உலகம் முழுவதும் அவ்வளவு பார்வைகள் கிடைப்பது பெரிய விஷயமல்ல. ஹிந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், தமிழ்ப் படப் பாடலுக்கு 42 நாளில் இப்படிப்பட்ட சாதனை கிடைப்பது மிகப் பெரும் விஷயம்.
யுவன், தனுஷ் கூட்டணியின் பாடல் ஒன்று இந்த அளவிற்கு சாதனை புரிந்திருப்பதைத் தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் பாராட்டி கொண்டாட வேண்டும்.