தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின் பெயரில் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களில் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் எதிர் வரும் 25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு மாவட்ட ரீதியில் ஆய்வினை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை ஆளுநர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என 3வது வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் வடக்கின் ஆளுநர் 5 மாவட்டங்களிற்கும் நேரில் சென்று முதல் கட்ட அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். இதன் பிரகாரம் மாவட்டந்தோறும் படையினர் உடனடியாக விடுவிக்கும் நிலங்களிற்கான ஓர் பட்டியலும் பதிலீடுகளுடன் விடுவிப்பதற்கு இணங்கும் பட்டியல் எனவும் இரு பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக விடுவிப்பதற்காக இணக்கம் கானப்பட்ட நிலங்கள் எதிர்வரும் 25ம் 26 ஆம் திகதிகளில் வடக்கின் 5 மாவட்டத்திலும் நிலங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 25ம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் 26ஆம் திகதி கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா மாவட்டத்திலும் நிலங்கள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக ஓர் திகதியில் விடுவிப்பதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

