பிரபுவும், மதுபாலாவும் 23 ஆண்டுகளுக்கு முன்பு (1996) பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு தற்போது காலேஜ் குமார் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படம் கன்னடத்தில் வெளியான காலேஜ் குமாரா படத்தின் ரீமேக் ஆகும். கன்னட படத்தை இயக்கிய ஹரி சந்தோஷ், தமிழிலும் இயக்குகிறார்.
பிரபும் மதுபாலாலாவும் ஹீரோவின் அம்மா, அப்பாவாக நடிக்கிறார்கள். ராகுல் விஜய், பிரியா வட்லமணி ஆகியோர் இளம் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மாணவர் குதாப் இ கிர்பா இசை அமைக்கிறார், குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து பிரபு கூறியதாவது: நான் சங்கிலி படத்தில் அறிமுகமாகி, 37 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. காலேஜ் குமார் எனது 225வது படம். கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்கிற படம். 23 ஆண்டுகளுக்கு பிறகு மதுபாலாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
மதுபாலா கூறியதாவது: ரோஜா, அழகன், ஜென்டில்மேன் போன்ற படங்கள் எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம். 23 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு உடன் நடிப்பது மகிழ்ச்சி. பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங்கின்போது, பொள்ளாச்சியில் என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா, தங்கை மாதிரி பார்த்துக் கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்பு தான் காரணம். 23 ஆண்டுக்கு பிறகும் அதேமாதிரி இருக்கிறார் என்றார்.