இளையராஜா – கேஜே.யேசுதாஸ் கூட்டணியில் பல அருமையான பாடல்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக இவர்கள் இருவரும் 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின்னர் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடவில்லை.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகி வரும் தமிழரசன் படத்தில் யேசுதாஸ் பாடியிருக்கிறார். “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாடியிருக்கிறார்.
இந்தப்பாடல் பதிவின்போது யேசுதாஸ்க்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜா, இப்பட இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் வரவேற்றனர். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.
தமிழரசன் படத்தை எஸ்.என்.எஸ்.மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி உடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாபு யோகேஸ்வரன்.