டுபாய் – ஷார்ஜாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஷார்ஜா பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் தங்கியிருந்த 2 ஆண்களும், 3 பெண்களுமாக ஐவர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களின் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் தந்கை, மகன் மற்றும் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உறவினர்கள் என கருதப்படும் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் ஆண் ஒருவர் குறித்த விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து பொலிஸார் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த வீட்டை திறப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இதன்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பொலிஸார் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், மற்றைய மூன்று பெண்களும் தமது கைகளை வெட்டிக் கொண்டு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் தாயுமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
55 வயதான ஜே.கே, அவரது 54 வயதான மனைவி பி.எஸ். மற்றும் அவர்களது 19 வயதான மகன் ஜே.என் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இவர்களது உறவினர்கள் என கருதப்படும் இரு பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது ஒரு திட்டமிட்ட தற்கொலை சம்பவம் என ஷார்ஜா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.