ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை ஆடிய 10 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. தாங்கள் விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி, தற்போது சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
அதேபோல் கணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தும் கொல்கத்தா அணி 11 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தூரிலுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியமான போட்டியாகும். 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இவ்விரண்டு அணிகளும் கடுமையாக முயற்சி செய்கின்றன.